யாரையும் காதலிக்காதவர்களுக்கு
யாராலும் காதலிக்கப்படாதவன்
எழுதும் கடிதம் இது.
காதலில்
வெறும் பார்வையாளனாய்
இருப்பதின்
அவஸ்தைகளை சொல்கிறேன்
பங்கேற்ப்பாளனாய் இருக்கும்
அதிர்ஷ்டம் வாய்த்ததில்லை எனக்கு.
எனது இரு சக்கர வாகனத்தின்
பின் இருக்கையில்
வழித்துணையாய் கூட
யாரும் வந்ததில்லை.
எனது சாலைகள்
இன்னும் முடிவுற வில்லை
எனது பரிசுத்தமான அன்பு
பரிமாறப்படாமல் தேங்கி கிடக்கிறது
எனது அன்பின் கணத்தை தாங்க
யாருக்கும் திராணியில்லை .
அதீத ஒழுக்கம் கொண்டவனின்
உறுதியை சோதிக்கும்
கடவுள் கூட சற்று
களைத்துப் போகிறான்
எதையும் உண்பதற்கு
தடை செய்து விட்டு
பசியை மட்டும் தூண்டுகிறான்
பாவி அவன்
என்னை படைத்ததற்காக
மன்னிப்பு கேட்கிறான்
நான்
மன்னிக்க தயாராக இல்லை
எனது சவப்பெட்டியின்
மூடியை
தேடித்தரச்சொல்லுங்கள்
சிராஜ்