Thursday, December 2, 2010

வாழ்த்துகிறேன்

உனக்கு வாழ்த்துச் சொல்ல
நான் வலுவானவனுமில்லை
உன்னை ஆசீர்வதிக்க
நான் வரம் வாங்கி வந்தவனுமில்லை

        காரணங்கள் மறந்து போய்
        கடைசியில் பிரிவு மட்டுமே
        நிரந்தரமாகிப் போகும் - சில
        அண்ணன்-தம்பி உறவைப் போல
        நம் நட்பை மாற்றிட
        நினைக்கிறாய் நீ..,

யாரோடும் எனக்கு கோபமுமில்லை
யார் மீதும் எனக்கு வருத்தமுமில்லை

        உனக்கு தெரியும்
        மலர்ந்தால் ரோஜாவாய்  சிரிக்கும்
        கசக்கினால் அத்தராய் மணக்கும்
        நம் நட்பு

எந்த தேவதூதர்களோடும்
நான் தேநீர் குடித்ததில்லை
எல்லா சாத்தான்களோடும்
சாராயம் குடித்திருக்கிறேன்

        சில நேரங்களில்
       அதிகம் பேசிவிடுகிறேன்
       அது என் பலவீனம்
       சில நேரங்களில்
       குறைவாகவே பேசுகிறேன்
       அது என் சாதூர்யம்
       மிக அரிதாகவே வாய்க்கிறது
       சில தருணங்கள்
       மௌனமாக இருப்பதற்கு

கடவுளை சபிக்க
நான் கொடூரமனவனுமில்லை
கடவுளிடம் கையேந்த
நான் கோழையுமில்லை

       ஆணையிடுகிறேன் ஆண்டவனுக்கு
       அவன் (பிறந்த நாள் )
       ஆசி வழங்குவான்  உனக்கு
  
                                     நண்பன் கார்த்திக்கு
                                      சிநேகமுடன்  சிராஜ்  

No comments:

Post a Comment